விளையாட்டு

வாழ்த்து மழையில் நனையும் ஆட்டோ டிரைவர் மகன்!

webteam

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள, டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆட்டோ டிரைவர் மகன் முகமது சிராஜ் வாழ்த்து மழையில் நனைகிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் மும்பையின் ஸ்ரேயாஸ் ஐயர், ஐதராபாத்தின் முகமது சிராஜ் ஆகிய புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முகமது சிராஜ், ஆட்டோ டிரைவரின் மகன். ஐ.பி.எல். போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடி வரும் இவர், முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

‘எங்கள் மகன், இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதைக் கேள்விபட்டதும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’ என்கிறார் சிராஜின் தந்தை முகமது ஹவுஸ்.

‘எனக்கு தகவல் கிடைத்ததும் என் அப்பாவுக்கும் அண்ணன் முகியது இலியாஸுக்கும் போனில் சொன்னேன். என் அப்பாவுக்கு பேச்சே வரவில்லை. அவர் சந்தோஷத்தில் அழத்தொடங்கிவிட்டார். அது, இந்திய அணியா, இந்திய ஏ அணியா என்று இரண்டு முறை விசாரித்தார். நான், இந்திய அணிதான் என்று சொன்னதும், ’மகனே எங்களை பெருமை படுத்திவிட்டாய்’ என்றார். இப்போது வாழ்த்துகளால் நனைந்து கொண்டிருக்கிறேன். டேவிட் வார்னர், தவான், விவிஎஸ் லக்‌ஷமண், டாம் மோடி ஆகியோர் போனில் வாழ்த்தினார்கள்’ என்றார்.