விளையாட்டு

விராத் கோலியை விலங்குகளுடன் ஒப்பிட்ட ஆஸி. ஊடகம்

விராத் கோலியை விலங்குகளுடன் ஒப்பிட்ட ஆஸி. ஊடகம்

webteam

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட டிஆர்எஸ் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை விலங்குகளுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலிய ஊடகத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் உள்ள வீரர்களிடம் உதவி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித், மதி மயங்கிய நிலையில் அந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக ஐசிசியிடம் புகார் தெரிவித்த இந்திய அணி நிர்வாகம், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புகாரைத் திரும்பப் பெற்றது. இதன்மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்து, ராஞ்சியில் நடக்க இருக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அனைவரின் கவனம் திரும்பியது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணையதளம் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை, விலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய விலங்குகளின் வரிசையில் விராத் கோலியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.