விளையாட்டு

வார்னர் - ஆடம் சாம்பா அசத்தல்! இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

EllusamyKarthik

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது. 

அந்த அணிக்காக குசல் பெரேரா, அசலங்கா மற்றும் பனுகா ராஜபக்சே என மூன்று பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதில் சாம்பா நான்கு ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர் மற்றும் ஃபின்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஃபின்ச் 37 ரன்களில் அவுட்டானார். நெட் ரன் ரேட்டை அதிகரிக்கும் நோக்கில் மேக்ஸ்வெல் மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினர். இருந்தும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. 

வார்னர் 31 பந்துகளில் அரை சதம் விளாசினார் வார்னர். இறுதியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ஓவர்களில் 155 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. வார்னர் 65 ரன்களில் அவுட்டானார்.