விளையாட்டு

‘தோனிக்கு பதில் பண்ட்’ சோதனை முயற்சியில் கோலிக்கு கிடைத்தது என்ன?

‘தோனிக்கு பதில் பண்ட்’ சோதனை முயற்சியில் கோலிக்கு கிடைத்தது என்ன?

rajakannan

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில், இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அதுவும், ஸ்மித், வார்னர், ஸ்டார் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த தோல்வி உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணிக்கு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. 

இந்திய அணி இந்த தொடரை ஒரு சோதனை முயற்சியாக செய்யப் போகிறது என்று இந்திய அணி தரப்பில் முன் கூட்டியே சொல்லப்பட்டது. அதனால் தான், 5 போட்டிகளிலும் ஏராளமான மாற்றங்கள் இருந்தன. பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆல் ரவுண்டரில் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் பந்துவீச்சில் பும்ரா, குல்தீப் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்கள். மற்ற நான்கு இடங்களுக்கு வீரர்கள் மாற்றி மாற்றி களமிறக்கப்பட்டனர்.

ராயுடுவிற்கு முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 13,18, 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். கே.எல்.ராகுலுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் ரிஷப் பண்ட் விளையாடினார். தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், பண்ட் மீது பலருக்கு நம்பிக்கை இருந்தது. 

ஆனால், அந்த நம்பிக்கையை அவர் ஏமாற்றிவிட்டார். நான்காவது ஒருநாள் போட்டியில் 24 பந்துகளில் அவர் 36 ரன்கள் எடுத்தார். ஆனால், முக்கியமான கடைசிப் போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அதுகூட பரவாயில்லை, நான்காவது போட்டியில் முக்கியமான ஸ்டம்பிங்கை தவறவிட்டதுதான் இந்திய அணி தொடரை இழக்க காரணமாக அமைந்துவிட்டது. பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஷமி, குல்தீப், ஜடேஜா என பலரும் மாற்றி, மாற்றி களமிறக்கப்பட்டனர். 

ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய அணி சிறந்த வீரர்களை கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிரச்னை என்னவென்றால் யாரை அணியில் இடம்பெறச் செய்வது, யாரை எடுப்பது என்பதில், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிக்கல் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பு இப்படியொரு முயற்சி செய்யப்பட்டது சரிதான் என்றாலும். அதற்கு உரிய பலன் கிடைத்ததா என்பது சந்தேகமே.

முக்கியமான தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இழந்ததுதான் மிச்சம். விராட் கோலி தலைமையில் இந்திய அணி வேக வேகமான வீறுநடை போட்டி முன்னேறி வந்து கொண்டிருந்தது. அத்தகைய நேரத்தில், அதுவும் உலகக் கோப்பைக்கு முன்னதாக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.