விளையாட்டு

கடைசி டெஸ்டில் ஆஸி. 369 ரன்கள் குவிப்பு; நடராஜன், சுந்தர், ஷர்துல் தலா 3 விக்கெட்டுகள்!

Sinekadhara

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமாகினர். மயங்க் அகர்வால், ஷர்துல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லபுஷேனின் அபார சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் க்ரீன் மற்றும் கேப்டன் பெய்னின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிம் பெய்ன் 50 ரன்களிலும், க்ரீன் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கம்மின்ஸ் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர், ஹாசில்வுட் 11 ரன்களிலும், லியோன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்திருந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்தது.

தமிழகச் சேர்ந்த இந்திய வீரர்களான நடராஜன், வாஷிங்டன் ஆகியோர் தங்கள் அறிமுகப் போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.