விளையாட்டு

சூப்பர் 4 இல் 'சூப்பர்' வெற்றி - ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் வென்ற இலங்கை!

JustinDurai

ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பா் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 'சூப்பர்4' சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்க பேட்டா்கள் பதும் நிசங்கா-குஸால் மெண்டிஸ் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. நிசங்கா 35 ரன்னும், மெண்டிஸ் 36 ரன்னும் அடித்தனர். தனுஷ்கா குணதிலகா 33, பானுகா ராஜபட்ச 31 ரன்களை விளாசி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். வனின்டு ஹஸரங்க 16, கருணரத்னே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா். இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணிலேயே வெளுத்தெடுத்த ஜிம்பாப்வே!