இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தமிழக வீரர்கள் அஸ்வின், முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்த அணிகள் மோத உள்ளன. இதையடுத்து டி20 தொடரில் மோதுகின்றன. இதற்கான வீரர்களை தேர்வு செய்ய, தேர்வுக்குழு இன்று கூடியது. டி20 போட்டிக்கு, மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஐதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
விராத் கோலி, தவான், ரோகித் சர்மா, ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஸார் படேல், சாகல், குல்தீப், புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது சிராஜ், ஆசிஷ் நெஹ்ரா (நவம்பர் 1-ம் தேதி நடக்கும் போட்டிக்கு மட்டும். அதோடு ஓய்வு பெறுகிறார்).
நியூசிலாந்து தொடரை அடுத்து இலங்கையுடன் நடக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான வீரர்களும் இன்று தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வின், ஜடேஜா, காயத்தால் ஓய்வில் இருந்த முரளி விஜய் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
அணி விவரம்:
விராத் கோலி, ராகுல், தவான், முரளி விஜய், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷமி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், இஷாந்த் சர்மா.
இலங்கை தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ’வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவது பற்றி நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அதற்காகத்தான் சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கேப்டனுக்கும் பொருந்தும். இலங்கை தொடருக்குப் பிறகு அவரது ஓய்வு பற்றி கவனிப்போம்’ என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.