விளையாட்டு

விருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய ? குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் !

விருதையும் பதக்கத்தையும் வைத்து என்ன செய்ய ? குல்ஃபி விற்கும் குத்துச் சண்டை வீரர் !

webteam

இந்தியாவின் பெயரை உலக அரங்கில் தூக்கிப் பிடித்தவர் இன்றோ தினசரி வாழ்க்கையை கழிப்பதற்காக குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறார்.

ஹரியானாவை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் தினேஷ் குமார். தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஏகப்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். குத்துச் சண்டையில் தனது கெட்டிக்காரத்தனத்தை காட்டியதால் இதுவரை 17 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். தினேஷ் குமாரின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசும் ஏற்கெனவே இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவம் செய்தது. இத்தனை இருந்தும் என்ன ? இன்றோ தினசரி சாப்பாட்டிற்காக வீதி வீதியாக சென்று குல்ஃபி விற்று வருகிறார். அதில் கிடைக்கும் பணமே அவரின் வயிற்றை நிறைக்க உதவுகிறது.

தினேஷ் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சிசிக்சைக்காக தினேஷ் குமாரின் தந்தை கடன் வாங்கியுள்ளார். ஏற்கெனவே தினேஷ் குமார் சர்வதேச போட்டியில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் தினேஷ் குமாரின் தந்தை லோன் வாங்கியிருக்கிறார். சிகிக்சைக்கான கடனும் சேர ஒட்டுமொத்த குடும்பமுமே கடனில் சிக்கியுள்ளது.

தற்போது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் இருக்கும் தினேஷ் குமார் அப்பா வாங்கிய கடனை அடைப்பதற்காக வீதி வீதியாக சென்று குல்ஃபி விற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ நான் தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக வெற்றிகளை குவித்தபோதிலும் கூட என் ஏழ்மை நிலையை மத்திய அரசோ, மாநில அரசோ கண்டுகொள்ளவில்லை. எனக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் என் அப்பா சிரமப்பட்டு வருகிறார். அதனால் இனியும் அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்பதால் நானே குல்ஃபி விற்கலாம் என முடிவெடுத்துவிட்டேன். எனக்கு நிலையான ஒரு அரசாங்க வேலையை அரசாங்கம் வழங்கம் வேண்டும்.  இப்போதும் நான் ஒரு சிறந்து விளையாட்டு வீரர்ததான். என்னால் இளம்வீரர்களை சர்வதேச அளவில் ஜொலிக்க வைக்க முடியும். அவர்களுக்கான பயற்சியாளராகவாவது என்னை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினேஷ் குமாரின் பயிற்சியாளர் விஷ்ணு பகவான் கூறும்போது, “ தினேஷ் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். ஜூனியர் அளவிலான போட்டிகளில் ஏரளாமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது காயம் காரணமாக குல்ஃபி விற்று வருகிறார். அரசாங்கம் அவருக்கு உதவுவதன் மூலம் நிச்சயம் அவரின் குடும்பம் கடனிலிருந்து விடுபடும். வருங்காலத்தில் தினேஷ் நிலையான வாழ்க்கை வாழ அரசாங்கம் உதவ வேண்டும்”என தெரிவித்தார்.