இலங்கை கிரிக்கெட் அணியின், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக மேத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியுடன் இலங்கையில் நடந்த தொடரில் படு தோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா நீக்கப்பட்டார். இந்நிலையில், அணியின் தொடர் தோல்வி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான், கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய மேத்யூஸ் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மேத்யூஸ் கூறும்போது, ‘நான் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹதுரு ஐயா (ஹதுருசிங்கா) வும் என்னிடம் பேசினர். என் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன். இன்றைய நிலையில் இலங்கை அணிக்கு நிலையான தன்மை வேண்டும். கடந்த சில மாதங்களில் நமது கிரிக்கெட் அணி பல கேப்டன்களை பார்த்துவிட்டது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டபோதும் போட்டிகளில் நாம் வெற்றி பெறமுடியவில்லை. இப்போதைய நோக்கம் உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்வது. அதற்கான பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்றார்.
இலங்கை டெஸ்ட் அணிக்கு தினேஷ் சண்டிமால் கேப்டனாக நீடிக்கிறார்.