விளையாட்டு

இங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்!

இங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்!

webteam

லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்து.


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் இரண்டாம் நாளில் போட்டி தொடங்கியது. இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் டேவிட் மலன், ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஈரப்பதமான ஆடுகளம் மற்றும் மேகமூட்டமான வானிலையைக் கருத்தில் கொண்டு பந்து வீச்சை அந்த அணி தேர்வு செய்தது. அது சரிதான் என்பது போல பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரின் 5 வது பந்தில் போல்டானார் முரளி விஜய். அடுத்து ராகுலுடன் இணைந்தார் புஜாரா. ராகுல் 8 ரன்னில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆக, கேப்டன் விராத் வந்தார்.

6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கோலியின் தவறான அழைப்பால் புஜாரா ரன் அவுட் ஆனார். அடுத்து ரஹானே வந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ’ஸ்விங்’கை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். கோலி 24 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ரஹானேவும் அஸ்வினும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றனர். 

ஆனாலும் அவர்களால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. ரஹானே 18 ரன்களிலும் குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், அஸ்வின் 29 ரன்களிலும் இஷாந்த் ஷர்மா ரன் ஏதுமின்றியும் அவுட் ஆக,  இந்திய அணி முதல் இன்னிங்சில், 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது.

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.