விளையாட்டு

பிரிட்டனில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கருப்பின நாயகி

jagadeesh

பிரிட்டனில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார் அலைஸ் டியர்லிங்.

24 வயது வீராங்கனையான அலைஸ் டியர்லிங், மராத்தான் நீச்சலில் திறன்பெற்றவர். இப்போது ஒரு வரலாற்றை தம்வசப்படுத்தியிருக்கிறார் அவர். இதுவரை பிரிட்டன் நீச்சல் அணியில் வெள்ளையர்களே இடம்பெற்றிருந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் அவர். போர்ச்சுகலில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் மராத்தான் நீச்சலில், பந்தய இலக்கை 2 மணி நேரம் 2 நிமிடங்கள் ஒரு நொடியில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் தமது பங்களிப்பை உறுதி செய்துகொண்டார்.

இந்தப் போட்டியில் ஹங்கேரியின் அன்னா ஓலஸ் பந்தய இலக்கை 2 மணி நேரம் ஒரு நிமிடம் 55 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முதல் 9 இடங்களைப் பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், அதில் ஒருவராக அலைஸ் டியர்லிங் இடம்பிடித்து சாதித்தார். போட்டிக்குப் பின் பேட்டியளித்த அவர், கொரோனா முதல் அலையில் இருந்தே இதற்காக தீவிரமாக கடினமாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் , கடும் போராட்டத்திற்குப் பின் தமது கனவு நனவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என தெரிவித்த அலைஸ் டியர்லிங், தமது அடுத்த இலக்கு ஒலிம்பிக் பதக்கம்தான் என உறுதியுடன் இருக்கிறார்.