விளையாட்டு

குணதிலகா சதம் வீண்: தொடரை வென்றது பாகிஸ்தான்

webteam

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தனுஷ்கா குணதிலகா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஃபெர்னாண்டோ 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் தனுஷ்கா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதற்கிடையே வந்த கேப்டன் திரிமின்னே 36 (53) ரன்களில் அவுட் ஆனார். விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடிய தனுஷ்கா அபார சதம் அடித்தார். அடுத்தடுத்து வந்த இலங்கை வீரர்கள் விக்கெட்டை இழக்க, இறுதி நேரத்தில் வந்த கீப்பர் தசுன் ஷானகா 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். நிலைத்து ஆடிய தனுஷ்கா 133 (134) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 297 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், பஹர் ஜமானும் அபித் அலியும் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். அபித் அலி 74 ரன்களிலும் பஹர் ஜமான் 76 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபர் ஆசம் 31, கேப்டன் சர்ஃபிராஸ் அகமது 23 ரன்களில் பெவிலி யின் திரும்ப, ஹரிஸ் சோஹைலும் (56), இஃப்திகர் அஹமது (28)வும் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். 48.2 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அபித் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.