விளையாட்டு

"என் மகனுக்கு ஏற்ற சாதாரண பெண்"-விஜய் சங்கர் திருமணம் குறித்து தந்தை !

jagadeesh

என் மகனைப் போலவே அவருக்கு கிடைத்த பெண்ணும் சாதாரணமானவர்தான் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான விஜய் சங்கரின் தந்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விஜய் சங்கர் அண்மையில் தனது நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார். அத்துடன் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படங்களை அவர் வெளியிட்டார். 29 வயதான விஜய் சங்கர் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 45 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 2242 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய ஏ அணியில் 88 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கேப்டனாக இருந்து விஜய் ஹசாரே திரொபி கோப்பை வென்றிருக்கிறார்.

இந்தத் திருமண நிச்சயதார்த்தம் குறித்து "டெக்கான் கிரானிக்கல்" நாளிதழுக்கு விஜய் சங்கரின் தந்தை பேட்டிக் கொடுத்துள்ளார் அதில் "வைஷாலியுடன் விஜய் சங்கருக்கு பெற்றோர்களால் பார்க்கப்பட்டு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. ஜாதகம் உள்ளிட்ட சடங்குகளும் பார்த்தோம். விஜய் கிரிக்கெட் வீரர் என்பதால் அவர் நிறைய பயணம் செய்ய வேண்டும். அவருக்கு ஏற்றப் பெண்ணாக வைஷாலி இருந்தார். விஜய்க்கு முழுவதுமாக வைஷாலியை பிடித்திருந்தது, அதன் பின்பே திருமண நிச்சயம் செய்தோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "விஜய் எப்போதும் சாதாரணமாகவே இருப்பார். அவருக்கு எப்போதுமே வித்தியாசமான சிகையலங்காரம், டாட்டூ போட்டுக்கொள்வது ஆகியவை பிடிக்காது. அவரைப் போலவே வைஷாலியும் சாதாரணப் பெண்ணாகவே இருக்கிறார். எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மண்டபத்தில் 40 பேர் மட்டும் நிச்சயத்தில் கலந்துகொண்டனர். துபாய்க்கு விஜய் புறப்படும் முன்பே நிச்சயதார்த்தம் முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டோம்" என்றார்.