அர்ஜூனா விருது வழங்கப்பட்ட போது
அர்ஜூனா விருது வழங்கப்பட்ட போது pt web
விளையாட்டு

விளையாட்டு துறையில் சாதித்த முகமது ஷமி, ஷீத்தல் தேவி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!

Angeshwar G

விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உரிய விருதான அர்ஜூனா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் தமிழக செஸ் வீராங்கனை உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்திய வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த முகமது ஷமி 10 பவுலிங் சராசரியுடன் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதில் இரண்டு 5 விக்கெட்டுகளும், ஒரு 7 விக்கெட்டுகளும் அடக்கம். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த முகமது ஷமி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார். மேலும் உலகக்கோப்பையில் ஒரு இந்திய பவுலரால் பதிவுசெய்யப்பட்ட சிறந்த பந்துவீச்சும் அதுவாகும். அவருக்கு இன்று அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி பெண் வில்வித்தை வீரரான ஷீதல் தேவி பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை பெற்றிருந்தார். அவருக்கும் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி செஸ் துறையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருந்தார். இதன்மூலம் தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் முதல் பெண் என்ற பெருமையையும் வைஷாலி தன்வசம் ஆக்கினார். அவருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விருதினைப் பெற்றார்.

மொத்தமாக 26 விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.