விளையாட்டு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்

jagadeesh

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா (66) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் யஷ்பால் சர்மா. 1979 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் யஷ்பால் சர்மா. அதிரடி விளையாட்டுக்கு புகழ்ப்பெற்ற யஷ்பால் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் 1,606 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 883 ரன்களையும் சேர்த்திருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இரு முறை பணியாற்றி இருக்கிறார்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் யஷ்பால் சர்மாவின் அதிரடி பேட்டிங் இப்போதும் பேசப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, 1954-ஆம் தேதி பிறந்த யஷ்பால் சர்மாவுக்கு, ரேணு சர்மா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். யஷ்பால் சர்மாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு பல இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.