விளையாட்டு

“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி

“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி

webteam

இந்தியா பேட்டிங் செய்தபோது சற்று பதட்டமாக இருந்ததாகவும், ஆனால் தோனியும், ஜாதவும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திவிட்டதாகவும் இந்தியக் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோப்பையை வென்றது தொடர்பாக பேசிய கோலி, “பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் பின்னர் இல்லை. அதனால் சற்று அழுத்தம் இருந்தது. ஆனால் தோனியும், ஜாதவும் முறையான ஆட்டத்தால் சிறந்த முடிவை பெற்றுத்தந்தனர். எங்களுக்கு சற்றுப் பதற்றம் இருந்தது. ஆனால் இரண்டு பேர் சரியாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு சிறந்த ஜோடியாக விளையாடினர். 

குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இன்றைய போட்டி எப்படியிருக்குமோ என கணிக்க முடியவில்லை. ஆனால் சாஹல் வந்து ஒரு அழகான பந்துவீச்சை தந்தார். 6 விக்கெட் எடுத்தது அற்புதமான ஒன்று. கேதர் ஜாதவ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் சிறப்பாக செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் அணியில் விளையாடியுள்ளார். டி20 போட்டியில் சமன் செய்துள்ளோம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளோம். யாரேனும் ஆஸ்திரேலிய தொடர் என்ன ஆனது? எனக்கேட்டால், இரண்டு கைகளிலும் கோப்பையை காட்டுவேன். வெற்றியில் ஒருவனாக பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்றார். 

முன்னதாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், சஹால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தோனியும், கேதர் ஜாதவும் இறுதிவரை நின்று, 87 (114) மற்றும் 61 (57) ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். தொடரின் நாயகனாக மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்த தோனியும், இன்றைய போட்டியின் நாயகனாக சாஹலும் தேர்வு செய்யப்பட்டனர்.