விளையாட்டு

“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன்

“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன்

webteam

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டி தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏனென்றால், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்றுள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

ஹைதராபாத் அணி கடைசியாக கடந்த சனிக்கிழமை விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. போதிய பவுலர்கள் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. அன்றைய தினம் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார், ஷகிப் உல் ஹசன், ரஷித் கான், கலீல் அகமத் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய 5 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி கூடுதலாக பவுலர்களை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், “இது மிக கவனமாக விளையாட வேண்டிய ஒரு போட்டியாகும். அடுத்த கட்டத்திற்கு முன்னேற முக்கியமான போட்டி இதுவாகும். நாங்கள் 6வது பவுலரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். ஆனால் அது எங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்றும் நாங்கள் நினைக்கிறோம். 5 பவுலர்கள் என்பதே சரியாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.