விளையாட்டு

‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை: மௌனம் கலைத்த ஹர்திக் பாண்ட்யா

webteam

‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஹர்திக் பாண்ட்யா மெளனம் கலைத்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் கே.எல்.ராகுலுடன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இருவரும் பெண்களைப் பற்றி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியது. சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு எதிராக பலர் ஆவேசமாக எழுதினர். அதன் பிறகு இருவரும் அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சர்ச்சைக்குப் பின்னர், தன்னால்தான் இருவருக்கும் இந்த நிலைமை வந்துவிட்டதாக கரண் ஜோஹர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பல மாதங்கள் முன்பு நடந்த இந்தச் சர்ச்சை குறித்து பாண்ட்யா இப்போது மெளனம் கலைத்துள்ளார். ‘அந்த எபிசோடுக்கு பின்னர் நடந்த விஷயங்கள் கட்டுப்பாட்டிலே இல்லை” எனக் கூறியுள்ளார்.

‘இந்தியா டுடே’க்கு பேட்டி அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, “என்ன நடக்கும் என்று கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்குத் தெரியாது. பந்து எனது கோட்டில் இல்லை, அது வேறொருவரின் கோட்டில் இருந்தது. அங்கு அவர்கள் ஷாட் எடுக்க வேண்டியிருந்தது. நீங்கள் இருக்கவே விரும்பாத மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடம் அது”என்று கூறியுள்ளார்.

இந்தப் புத்தாண்டு அன்றுதான் ஹர்திக் பாண்ட்யா, அவரது காதலியுடன் துபாயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தினருக்கே தெரியாது என அவரது தந்தை பேட்டி அளித்ததால் விவகாரம் இன்னும் கொஞ்சம் பரபரப்பானது.