திருப்பதி  X
ஆன்மீகம்

திருப்பதி கோயிலில் குவியும் பக்தர்கள்.. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

திருப்பதி கோயிலில் அடுத்து வரும் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vaijayanthi S

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இதனால் தற்போது திருமலையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானம் இதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்தத் முடிவு செய்துள்ளனர். அதன்படி கோடைக்காலத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

திருப்பதி

மூன்று மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து ஏன்? 

இதனால் ஜுலை மாதம் வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசனம் கடந்த மே 2ஆம் தேதி முதல் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சர்வ தரிசன டோக்கன்களைக் பெற்று வரும் பக்தர்களால் நேரடியாக இலவச தரிசனத்தில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் தரிசனம் விரைவாக நிறைவடையும். அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு விரைவாக சாமி தரிசனம் செய்துகொள்ளலாம். அவ்வாறு ஒரு நாளைக்கு 80,000 பேருக்கு சாமி தரிசனம் செய்து வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பதி

இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு!

தினமும் 2 முதல் 3 மணி நேரம் விஐபி தரிசனங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ரத்து செய்யப்பட்டால், அந்த நேரத்தில் 15 ஆயிரம் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல் மே மாதம் என்பதாலும் வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும் என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், இலவச தரிசனத்திற்கு வரிசையில் வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரத்திற்கு பிறகே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால், பொறுமையாக காத்திருந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களுக்கான நேரம் வரும் போது சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.