விறன்மிண்ட நாயனார்
விறன்மிண்ட நாயனார் PT
கதைகள்

”திருவாரூர் சென்றால் காலை வெட்டுவேன்” - விறன்மிண்ட நாயனாரின் மிரட்சியான வாழ்க்கை வரலாறு!

Jayashree A

விறன்மிண்ட நாயனாரின் வாழ்க்கை வரலாறு

சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில் பிறந்தவர் தான்விறன்மிண்ட நாயனார். இவர் சிவபெருமான் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். பல்வேறு சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று சிவனை வணங்கி வந்துகொண்டிருந்தார்.

ஒரு சமயம் விறன்மிண்டவர் திருவாரூர் சென்று அங்கு தியாகராஜப் பெருமானை வணங்க சென்ற சமயம், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி அவ்விடம் வந்திருந்தார்.

விறன்மிண்டவரைப்போல் சிவனடியவர்கள் பல பேர் அங்கு கூடியிருந்த சமயத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் யார் ஒருவரையும் வணங்காமலும், அவர்களை கண்டுக்கொள்ளாமலும் ஒதுங்கி சென்றார். இது சிவனடியார் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

சுந்தரருக்கு சிவனோடு நெறுங்கிய நட்புறவு இருந்தது அனைவரும் அறிந்ததே. இது குறித்து சுந்தரரருக்கும் சற்றே செருக்கு தலைக்கேற அவர், மற்ற அடியார்களை மதிக்காமல் சென்ற செயல் விறன்மிண்ட நாயனாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. விறன்மிண்ட நாயனார் சுந்தரரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, அவரை அழைத்தார்.

ஆனால், சுந்தரர் அவர் அழைத்ததையும் பொருட்படுத்தாமல், அவரின் செய்கையில் இம்மியளவு கூட மாற்றம் இல்லாத்தைக்கண்ட விறன்மிண்ட நாயனார், சுந்தரரின் பேரிலும், அவருக்கு வாசலில் திருக்காட்சி அளித்த தியாகேசப் பெருமானின் மீதும் கோபம் கொண்டார்.

“திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும் புறம்பு

அவனை ஆண்ட சிவனும் புறம்பு” என்றவர்,

“இனி நான் திருவாரூருக்கு வருவதில்லை” என்று சபதம் கொண்டார். அது மட்டும் இன்றி “திருவாரூருக்கு சென்று வரும் சிவனடியவரின் காலையும் வெட்டுவேன்” என்று கூறி, ஆண்டிப்பந்தல் என்ற ஊரில் தங்கியிருந்தார்.

சிவபெருமான் விறன்மிண்ட நாயனார் மீது கருணைக்கொண்டு அவரின் பக்தியை உலகுக்குத் தெரிவிக்க விருப்பம் கொண்டவராய், சிவனடியார் வேடம் தரித்து ஆண்டிப்பந்தல் வந்தார். விறன்மிண்ட நாயனாரை சந்தித்தார்.

“அடியவரே நான் சிவதொண்டன். திருவாரூருக்கு சென்று, என் ஈசனை தரிசிக்க வேண்டும். திருவாரூருக்கு செல்லும் வழி இதுதானே?” என்று விறன்மிண்ட நாயனாரை கேட்கவும்,

கோபம் கொண்ட விறன்மிண்ட நாயனார், “நீ திருவாரூருக்கா செல்கிறாய்? இரு உன் காலை வெட்டுகிறேனா இல்லையாப் பார்.. ” என்று அடியவர் வேடம் தரித்து வந்த சிவபெருமானை துரத்த ஆரம்பித்தார்.

“இது என்னடா வம்பாக போய்விட்டது.. நான் வழிதானே கேட்டேன்” என்ற அடியவர் அவர் கையில் அகப்படாமல் வேகமாக ஓட ஆரம்பித்தார். விறன்மிண்ட நாயனார் துரத்த சிவனடியார் ஓட என்று இருவரும் திருவாரூருக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இப்பொழுது வேடம் தரித்த அடியவர் நின்றுவிட்டார்.

அதைக்கண்ட விறமிண்ட நாயனார்.. “ இத்தனை தூரம் ஓடிய நீங்கள் ஏன் நின்று விட்டீர்கள் ?” என்றார்.

“நீங்கள் என்ன சொன்னீர்கள்? திருவாரூர் மண்ணை மிதிக்க மாட்டேன் என்று சபதம் செய்தீர்களே.. ஆனால் தற்பொழுது நீங்களே இம்மண்ணை மிதித்து விட்டீர்களே?” என்று கேலி சிரிப்பு சிரித்தார்.

அப்பொழுது தான் விறன்மிண்ட நாயனார் தான் நின்றுக் கொண்டிருப்பது திருவாரூர் என்பதை தெரிந்துக்கொண்டார். சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த வாளால் தன் கால்களையே வெட்டிக்கொண்டார். உடனே சிவனடியார் உருவிலிருந்த சிவபெருமான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டார்.

சிவனடியார் உருவில் வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அறிந்துக்கொண்ட விறன்மிண்டர், அவரிடம் மன்னிப்புக் கோரி சிவபெருமான் மேல் பாடல்களை பாடினார். பிறகு கைலாசம் அடைந்தார்.