சபரிமலை பக்தர்கள்
சபரிமலை பக்தர்கள் புதியதலைமுறை
ஆன்மீகம்

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை.. "திருப்பதி" மாடல் வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கூட்டம்!

யுவபுருஷ்

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதுமுதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தின் பாதிக்கும் மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக்காலத்தின் துவக்கத்திலேயே அதிகரித்து வருகிறது. சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களை 18ம் படியேற்றவும், தரிசனத்திற்கு அனுமதிப்பதிலும் போலீஸார் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்போது "திருப்பதி" மாடல் வரிசையை தேவஸ்வம் போர்டு அமல்படுத்தியுள்ளது. அதன்படி பக்தர்கள் மரக்கூட்டம் முதல் சரங்குத்தி பகுதிகளில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு, மண்டப நடைப்பந்தலில் இருந்து தரிசனத்திற்கு கிளம்பியவுடன், படிப்படியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை துவங்கி பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது சபரிமலை. “திருப்பதி" மாடலான இந்த வரிசைத் திட்டம் மூலம் பக்தர்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த வரிசை முறை வெற்றிபெற்றதாக கூறும் தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்களின் வருகை அதிகரிக்கும் சமயங்கள் மற்றும் விழாக்காலங்களில் இந்த முறையை பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளனர்.