மார்கழி மாதத்தில், வைணவத் தலங்களில் திருப்பாவையும், சிவ தலங்களில் திருவெம்பாவையும் அதிகாலையில் பாடப்படுகின்றன.
திருப்பாவை திருவெம்பாவையின் பிற பாடல்களையும் விளக்கத்தையும் இங்கே வாசிக்கலாம்...!
இந்த மார்கழி மாதத்தில் 16ம் நாளான இன்று... தோழிகள் அனைவரையும் அதிகாலையில், எழுந்தவுடன் அனைவரும் நீராடிவிட்டு, பாவை நோன்பு நூற்பதற்கு தயாராகின்றனர். முன்னதாக, ஆலயத்திற்கு செல்கின்றனர்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பொருள்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! ... எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!... கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!
மணிக்கதவம் தாள்திறவாய்... ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை... மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்....
அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது” என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.
அடுத்ததாக சிவபெருமானின் பெருமையக்கூறும் திருவெம்பாவை...
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையில் 16ம் நாளான இன்று பெய்யும் மழை கூட பார்வதி தேவி போன்று கருணை பொங்க பெய்யவேண்டும் என்பதை பார்வதி தேவியை மழைமேகத்துடன் ஒப்பிட்டு பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பார்வதி தேவியானவள் எப்படிபட்ட நிறத்தைப்பெற்று இருக்கிறாளோ... அது போல் இந்த மேகங்கள், கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்று, எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன.
அதிலிருந்து வெளிப்படும் மின்னலானது எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் இருக்கிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.