திருமழப்பாடி நந்தியபெருமாளுக்கும் சுயசாம்பிகைக்கும் சிவபெருமான் சாட்சியாக நடத்திய திருக்கல்யாணம் காரணமாக, இந்த ஆலயம் திருமண தடை நீக்கும் தலமாக போற்றப்படுகிறது.
திருமணம் செய்வதில் தடை நீங்க, இதுவரை பலவிதமான விரதங்கள், பரிகாரங்கள் எனப் பல கோயில்களுக்குச் சென்றிருப்பீர்கள். ஆனால் அப்படி எந்தவிதமான பரிகாரமும் செய்யாமல் எந்த சிரமமும் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். ஆனால் உடனே திருமணம் கைகூடும்.. ஆம் , திருமழப்பாடியில் உள்ள இந்த ஒரே ஒரு கோயிலுக்கு மட்டுமே சென்றுவந்தால் போதும்.. அது எந்தக் கோயில்? எந்த நாளில் சென்று வழிபடுவது சிறப்பு என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில், தேவாரப் பாடல் பெற்ற 54-ஆவது சிவாலயமாகும். இந்த ஆலயம் நந்திதேவருக்கு திருமணம் நடந்த ஆலயமாகவும், நோய்களைத் தீர்க்கும் வைத்தியநாதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோயில், நந்தி வழிபாட்டிற்குரிய சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். அது மட்டுமல்லாமல், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆம், நந்தி பார்க்க முந்தி கல்யாணம் என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? அது, இந்த திருமழப்பாடி நந்தியம் பெருமாளின் மகிமையை குறித்தே சொல்லப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், நந்தியம் பெருமாளுக்கும் சுயசாம்பிகைக்கும் சிவனே திருமணம் செய்து வைக்க முடிவுசெய்து, திருமழப்பாடி வைத்தியநாத சுவாமியை சாட்சியாக கொண்டு ஐயாறப்பரே நந்தி தேவருக்கும், வியாக்ரபாத முனிவரின் மகளான சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் நடத்தி வைத்தார் என்று புராணத்தில் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ஆண்டுதோறும் இத்தலத்தில் நந்தி திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்படுவதற்கு முன்பாக திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம் பெருமானுக்கு பிறப்பு விழா நடைபெறுவது வழக்கம். வேதங்கள் முழங்க மேலதாள இன்னிசை கச்சேரியோடு நந்தி பெருமானுக்கு பிறப்பு விழா நடைபெறும். அத்துடன் அன்று மாலை அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் ஆலயத்தில் நந்தியபெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடைபெறும்.
அப்படி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டவுடன் மறுநாள் காலை ஐயாறப்பர் அம்பாள் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்திய பெருமான் பட்டுவேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாணவேடிக்கையுடன் திருவையாற்றில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு சென்றடைவார்கள்.
அன்று இரவே திருமழப்பாடியில் நந்திய பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இந்த திருக்கல்யாண உற்சவத்தில் சுற்றுவட்டத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..
இந்த திருமழப்பாடி ஆலயத்தில் சிவன் வைத்தியநாத சுவாமி தாயார் சுந்தராம்பிகையுடன் காட்சியளிக்கிறார். அத்துடன் இங்கு திருவள்ளுவருக்கு 750 கிலோ எடைகொண்ட வெண்கல சிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆலயத்தில்
நந்தி தேவர், ரிஷப முகத்துடன் இல்லாமல் மனித முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் மற்றொரு மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் திருமணகோலத்தில் நந்தியம் பெருமாள் காட்சியளிக்கும் ஒரே ஆலயமும் இதுதான்.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்கான நந்திய பெருமானின் திருக்கல்யாண உற்சவம், கடந்த மார்ச் 27ஆம் தேதி திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.