kalki kalki - AI
ஆன்மீகம்

கலியுக முடிவில் கல்கி அவதாரம் உண்மையா? இந்து புராணம் என்ன சொல்கிறது?

கல்கி அவதாரம் எப்போது, எப்படி வருவார்? கலியுகம் முடிந்து பொற்காலம் தோன்றுமா? இதுகுறித்த கேள்விகளுக்கு இங்கு விளக்கம் அறிவோம்.

Vaijayanthi S

கலியுகத்தில் அதர்மம் உச்சத்தை எட்டும் இறுதிக் காலத்தில், விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி தோன்றி தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என இந்து புராணங்கள் கூறுகின்றன.

நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருப்பது கலியுகம்.. அப்படி கலியுகம் என்றதும் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கல்கி அவதாரம்தான். ஆம், கலியுகத்தில்தான் விஷ்ணு பகவான் தனது பத்தாவது மற்றும் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை எடுத்து, இந்த கலியுகத்தில் தலைவிரித்தாடும் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று இந்து மத புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நமக்குத் தெரிந்ததே என்றாலும் இவை எல்லாம் உண்மைதானா என்ற கேள்வியும் எழுகிறது. ஆக, இந்த கல்கி அவதாரம் என்பது உண்மையா என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

vishnu 10 avatar

விஷ்ணு பகவான் இதுவரை வெவ்வேறு யுகத்தில் 9 விதமான அவதாரத்தை எடுத்து ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தைக் காத்தும் அதர்மத்தை அழித்தும் மக்கள் அனைவரையும் வழிநடத்திச் சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்து புராணங்களின்படி, 4 யுகங்கள் உள்ளன. அதில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகும். இதில் முதல் 3 யுகத்தில் மகாவிஷ்ணு, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், புத்தர், கிருஷ்ணர் என 9 அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் 4ஆவது யுகமான கலியுகத்தில் குற்றங்கள், அதர்மங்கள் மிக அதிக அளவில் நிகழும் என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோலவேதான் தற்போதைய கலியுகமும் உள்ளது.

இப்படி குற்றங்கள் அதிகமாக நிகழும் இந்த கலியுகத்தின் இறுதியில் கண்டிப்பாக விஷ்ணு பகவான் தனது 10ஆவது அவதாரமாகிய கல்கி அவதாரத்தை எடுப்பார் என்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படும் என்றும் இந்து புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக பகவத் கீதையில் கலியுகம் முடியும்போது அதர்மம் கோர தாண்டவம் புரியும். அனைத்தும் சர்வ நாசம் அடையும். அப்போது கல்கி அவதாரம் தோன்றும் என்று கூறபட்டுள்ளது. நான்கு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டதுதான் இந்த கலியுகம்.

kalki

இந்த கலியுகத்தில் அவதரிக்கும் கல்கி ஒரு வெள்ளைக் குதிரை மாதிரியான வடிவத்தில் கையில் ஒரு பெரிய வாளோடு வந்து , மனித இனத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சக்தியை அழிப்பார் என்று நம்பப்படுகிறது. அப்படி தீமை அழியும்போது கல்கி, இந்த கலியுகத்தை முடிவுக்குக் கொண்டு வருவார் என்றும் நம்பப்படுகிறது.

அதன்பிறகு நேர்மையைக் காத்து மீண்டும் சத்ய யுகம் தொடங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாறிமாறி சுழற்சி முறையில் தோன்றி விஷ்ணு பகவான் தனது 10 அவதாரங்களையும் எடுத்து எப்போதும் உலகில் தர்மத்தை நிலைநாட்டுவார் என்றும் நம்பப்படுகிறது.