மக்கள் தொகை கணக்கெடுப்பு முகநூல்
ஜோதிடம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு நடைபெறும் என அரசாணை வெளியீடு!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, இறுதியாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன்படி, 2021 ல் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரானா உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

மறுபுறம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதோடு, சாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில், மக்கள் தொகையுடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த, மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு தற்போது அரசுதழில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 34 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் அதிகாரிகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துகிறது.

நாட்டில் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ள நிலையில், நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய பதிவாளர் ஜெனரல், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.