Anjaneyar PT
ஆன்மீகம்

அமெரிக்காவில் பிரமாண்டம்.. ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை!

சுமார் 7 ஆண்டுகள் சிற்பக் கலைஞர்களால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட இந்த உயரமான ஹனுமான் சிலைம் அமெரிக்காவில் நிறுவப்பட்ட முதல் உயரமான சிலையாகும்.

Vaijayanthi S

அமெரிக்கா மேரிலாண்டின் இஜாம்ஸ்விலில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கிரானைட் கல்லிலிருந்து ஏழு ஆண்டுகள் பாடுபட்டு செதுக்கப்பட்ட 36 அடி உயர விஸ்வரூப ஹனுமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 52,000 சதுர அடி விரிவாக்கத் திட்டத்தின் மையமாக உள்ள இந்தச் சிலை, அமெரிக்க இந்து சமுதாயத்தின் ஆன்மிக, பண்பாட்டு அடையாளமாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆஞ்சநேயர் என்றாலே ராமன் மீது தீராத பக்திகொண்டவர், வலிமைமிக்கவர், அறிவில் சிறந்தவர், சிரஞ்சீவியானவர் என நம் அனைவருக்கும் தெரியும். இவர் அஞ்சனையின் மகனாகப் பிறந்து, ராம பக்தியில் சிறந்து விளங்கி, வாயுபுத்திரராகவும் சிவபெருமானின் அம்சமாகவும் போற்றப்படுகிறார். அத்துடன் ஆஞ்சநேயர் எப்போதுமே இந்துக்களின் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். உடல், அறிவு, வீரம் ஆகியவற்றின் உருவமாக விளங்கும் இவர், பக்தர்களின் மன வலிமை பெருக அருள்புரிவார் என்பது நம்பிக்கை. இவரை பக்தர்கள் செல்லமாக மாருதி, பஜ்ரங்பலி, ஹனுமான் எனப் பல பெயர்களால் அழைப்பார்கள்.

Anjaneyar

இவர் ராமாயணத்தில் இராமனின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர். இவரை வணங்குவதன் மூலம் மன உறுதி, தைரியம் மற்றும் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்று மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அத்துடன் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். இதனால் சனி தோஷம் விலகும்.

இத்தகைய சிறப்புகளை உடைய ஆஞ்சநேயருக்கு, இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது மற்றும் பிரபலமானது என்றால் அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலில் தற்போது ஒரே கிரானைட் கல்லிலிருந்து மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Anjaneyar

சுமார் 7 ஆண்டுகள் சிற்பக் கலைஞர்களால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட இந்த உயரமான ஹனுமான் சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்ட முதல் உயரமான சிலையாகும்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், DC அருகிலுள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் இஜாம்ஸ்விலில் (Ijamsville) ஸ்ரீ பக்த அஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.. இங்கு சுமார் 36 அடி உயரமுடைய மகத்தான விஸ்வரூப ஹனுமான் சிலையின் வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. ஒரே கிரானைட் கல்லிலிருந்து மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட இந்த புனித விக்ரகம், கோயிலில் அமைக்கப்பட உள்ள பிரமாண்ட ராஜகோபுரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்து சமுதாயத்திற்கு முக்கியமான ஆன்மிக மற்றும் பண்பாட்டுக் கோயிலாக இருக்கும் இந்த ஆலயத்திற்கு இதுபோன்ற உயரமான சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது என்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த விக்ரகம், சுமார் 10 தலைமுறைகளாக வந்த சிற்ப கலை நிபுணர்கள் கொண்ட ஷில்ப கலா நிலையம் மூலம் உருவாக்கப்பட்டது. அவர்கள் கல்லைத் தேர்ந்தெடுத்து, தெய்வீக சிலை வடிவத்தை செதுக்க ஏழு ஆண்டுகளுக்கு மேல் அர்ப்பணித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, ஸ்ரீபக்த அஞ்சநேயர் கோயில் சமூகத்திற்கு பக்தியுடன் சேவை செய்துவருகிறது.

சுமார் 36 அடி உயரமுடைய ஹனுமான் விக்ரகம், கோயிலின் 52,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் முக்கியப் பகுதி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிகழ்வு அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Anjaneyar

இந்த விஸ்வரூப ஹனுமானை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில், மேரிலாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் மற்றும் பல முக்கிய மாநில பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மேலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவிற்கு பிராந்தியத்தின் பல பகுதிகளிலிருந்து சமூக தலைவர்கள், குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வந்தனர். இந்த நிகழ்வு அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே ஒற்றுமை, பண்பாட்டு மரியாதை மற்றும் ஆன்மிகச் சிந்தனையை ஊக்குவித்தது.