ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனில் வான்வழித் தாக்குதல் - பதுங்குக் குழிகளில் சிக்கிய இந்திய மாணவர்கள்

JustinDurai

இந்திய மாணவர்கள் 800 பேர் சுமி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவித்து வருவதாக டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்நாட்டின் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் டெல்லியை சேர்ந்த கபில் சிங் என்கிற மாணவர், ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது சக மாணவர்களுடன் தங்கள் பல்கலைக்கழகத்தின் பதுங்குக்குழிக்குள் ஓடி ஒளியும் பரபரப்பு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  

இதுகுறித்து மாணவர் கபில் சிங் கூறுகையில், ''இங்கே தண்ணீரும் இல்லை, மின்சாரமும் இல்லை. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். எங்கள் அடிப்படைத் தேவைகள் தீர்ந்துவிட்டன. நாங்கள் இப்போது குழாய் தண்ணீரைக் குடிக்கிறோம். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தம் எங்களை பயமுறுத்துகிறது. 700 முதல் 800 இந்திய மாணவர்கள் வரை சுமி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவித்து வருகிறோம்'' என்று கூறினார்.



இதனிடையே, உக்ரைனில் உள்ள காா்கிவ், சுமி நகரங்களில் தவிக்கும் இந்திய மாணவா்களையும், வெளிநாட்டினரையும் மீட்பதற்காக 130 பேருந்துகள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவப்படை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இதுவரை எத்தனை இந்தியர்கள் உக்ரைனிலிருந்து வந்து இருக்கிறார்கள்? - மத்திய அரசு தகவல்