தூக்கம் ஆடம்பரம் அல்ல, அது உயிர்வாழ அடிப்படைத் தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். நவீன உலகில் பலர் தூங்குவதில் குற்ற உணர்ச்சி கொள்கின்றனர். இது தவறு. தூக்கம் மூளைக்கு முதலீடு. மற்றவர்களை ஒப்பிடாமல் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும். தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை.
பரபரப்பான இந்த நவீன உலகில் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதுகூட ஏதோ பெரிய குற்றத்தை செய்தது போன்ற உணர்வை பலரிடமும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாணவர்கள், பணிபுரியும் பெண்கள் தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகளை நினைத்து ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தூக்கம் ஆடம்பரம் அல்ல, அது உயிர்வாழ அடிப்படைத் தேவை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதை வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதை சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், “ஓய்வு எடுப்பது அடுத்த நாள் சிறப்பாக செயல்பட மூளைக்கு தரும் முதலீடு என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்லும் முன் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடும்போது மனபாரம் குறையும். மற்றவர்களின் சுறுசுறுப்புடன் உங்கள் உடலை ஒப்பிடாமல் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும். மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்ச்சி தேவையில்லையோ அதேபோல தூங்குவதற்கும் தேவையில்லை” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.