IRFAN HABIB
IRFAN HABIB Special Arrangement
இலக்கியம்

பாஜகவைப் பொறுத்தவரை தெற்கு சரியான முடிவை எடுக்கிறது : வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

karthi Kg

Samsung Galaxy Tab S9 Series நடத்திய ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை குறித்து எழுதுவது தொடர்பாகச் சுவாரஸ்யமான அமர்வு ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீபிடம் தற்போதைய இந்திய அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை எழுப்பினோம். அவருடன் பேசியதிலிருந்து.

Jaipur literature festival

இந்தியாவின் இடதுசாரி சிந்தனை கொண்ட வரலாற்று ஆய்வாளர்களால் தான் பெரும்பான்மை இந்தியர்களிடம் இந்தியாவின் உண்மை வரலாறு சென்று சேரவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறதே..!

பிரிட்டிஷ் காலணியவாதிகள் முதலில் நம் வரலாற்றை எழுதினார்கள். பின்பு தேசியவாதிகள் நம் வரலாற்றை எழுதினார்கள். பின்பு இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் வரலாற்றை எழுதினார்கள். இந்திய மக்களின் வரலாறு, இந்திய வணிகத்தின் வரலாறு என பல்வேறு விஷயங்களை பேசியவேண்டியதிருந்தது. வெறுமனே மன்னர்களைப் பற்றி மட்டும் பேசுவது வரலாறு அல்ல. பிரிட்டிஷ் எழுதாத வரலாற்றை அடுத்து வந்தவர்கள் எழுத வேண்டியதிருந்தது. வரலாறு என்பதே சப்ஜெக்டிவ் தான். ஒவ்வொரு வரலாற்று ஆய்வாளரும் அவர்தம் பார்வையில் தான் வரலாற்றை அணுகுவார்கள். ஆனால், அது தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இப்போது நம் நாட்டில் நடப்பது போல வாட்சாப் ஃபார்வார்டை நம்பி இருக்கக்கூடாது.

இந்தியா இந்து தேசத்தை நோக்கி நகர்வதாகச் சொல்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

இந்துத்வ தேசத்தை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவில் என்றும் ஒரு மதத்தின் ஆதிக்கம் நீடித்ததில்லை. அது மாறிக்கொண்டே இருக்கும். என் ஆயுட்காலத்தில் இந்தியா இந்து தேசமாக மாறாது என உறுதியாக நம்புகிறேன். ஆனால், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

அப்படி ஒருவேளை நடந்தால் இங்கிருக்கும் மதச்சார்பற்ற இந்துக்களில் நிலை என்னவாகும்..?

IRFAN HABIB

செக்குலர் இந்துக்கள் இன்னும் வீரியமாகப் போராட வேண்டும். இந்தியாவின் மதச்சார்பின்மைக்காக இஸ்லாமியர்கள் மட்டுமே போராடிக்கொண்டு இருக்க முடியாதே. பாஜக கிறிஸ்துவ மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக இருக்கிறது. பாஜக இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களுக்கு எதிராக இருக்கிறது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாஜக உண்மையில் இங்கிருக்கும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது.

500 ஆண்டுகால பிரச்னைக்கான முற்றுப்புள்ளி என ராமர் கோயில் நிகழ்வு பார்க்கப்படுகிறதே..!

வரலாற்றை மாற்றப் பார்க்கிறார்கள். யாராலும் வரலாற்றை மாற்றி எழுத முடியாது. ஒரு சாலையின் பெயரையோ நகரத்தின் பெயரை மாற்றுவதாலேயே இங்கு எதுவும் மாறிவிடாது. வரலாற்றை அப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது. வரலாறு என்பதை தரவுகளின் அடிப்படையில் தான் எழுத முடியும். வரலாற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்துகொள்ளலாம். ஆனால், தரவுகளை மாற்ற முடியாது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்துக்கள் செக்குலரா? இதே தேசத்தில் தானே ராமர் கோயில் கொண்டாட்டங்களும் களைகட்டி நடக்கின்றன...

ஹ்ம்ம்ம் . இப்படி சொல்லலாம். பெரும்பான்மை இந்துக்களுக்கு பெரும் அநீதி நடைபெற்றிருப்பதாக போலி வரலாறுகளை கற்பிக்கிறார்கள். தற்போது அந்த பிழைகள் சரிசெய்யப்பட்டுவருகின்றன என்கிற போலி பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். இதுவொரு மாயை. இல்லாத பிரச்னை உருவாக்கி அதன் மூலம் ருசிகாண அதிகார மையம் துடிக்கிறது. அதில் அவர்கள் அவ்வப்போது வெற்றியும் காண்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்துக்கள் இங்கு நடக்கும் அநீதிகளை எல்லாம் விரும்பவில்லை என்பதை நான் இன்னும் தீர்க்கமாக நம்புகிறேன். கடந்த தேர்தலைக் கணக்கிட்டால் 37% மக்கள் மட்டுமே பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். அப்படியெனில் 63% பாஜகவிற்கு எதிராகத்தானே இருக்கிறார்கள். தெற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தெற்கு சரியான முடிவை எடுக்கிறது. அது இப்படியே தொடரும் என நினைக்கிறேன்.

இர்ஃபான் ஹபீப் எழுதிய புத்தகங்கள்

To Make the Deaf Hear: Ideology and Programme of Bhagat Singh and His Comrades

Maulana Azad: A Life