இந்தியா

மெட்ரோ ரயில் நிலையத்தில் ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கைது

ச. முத்துகிருஷ்ணன்

நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜா தனது பிறந்தநாளை நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் கொண்டாட உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கில் அவரது ரசிகர்கள் திரண்டு ரயில் நிலையம் வந்ததால், நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தின் செக்டார் 51 பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

வழக்கமான மெட்ரோவில் பயணிப்பவர்களும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தால் தேவையற்ற நெரிசலை சந்தித்துள்ளனர். இதையடுத்து நொய்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 இன் கீழ் கவுரவ் தனேஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரையும் சில ரசிகர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.