delhi borewell accident
delhi borewell accident pt web
இந்தியா

டெல்லி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

Angeshwar G

டெல்லியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தவறி விழுந்த நிலையில் அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக தகவல் பரவியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் டெல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் காவல்துறையினர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குழந்தை இல்லை என்றும், 18 முதல் 20 வயதுடைய நபராக இருக்கலாம் எனவும் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக பேசிய மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படை அதிகாரி ரவீந்தர் சிங், ஆழ்துளைக் கிணற்றுக்குள் அந்த நபர் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அவரது உடலை மீட்டுள்ளனர்.