இந்தியா

மனைவியும், பால்ய நண்பரும் உறவில் இருந்ததால் ஆத்திரம்: சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்!

JananiGovindhan

தனது பால்ய நண்பருடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக 30 வயதுடைய மனைவியையும் நண்பரையும் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவத்தில் ஆறே மணிநேரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. கொலைக்கான பின்னணியை விசாரிக்க களத்தில் இறங்கிய டெல்லி போலீசார் இந்த இரட்டைக்கொலை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன்படி கடந்த கடந்த டிசம்பர் 30ம் தேதி 30 வயது பெண் மற்றும் ஒரு ஆணின் உடல் ஆரோபிந்தோ மார்க்கத்தில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனை அருகே ரத்த வெள்ளத்தில் நடைபாதையில் கிடப்பதாக தகவல் வந்ததை அடுத்து உடனடியாக விரைந்து இருவரையும் மீட்டு சஃப்தார்ஜங் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணின் முகத்தில் கூர்மையான கருவியால் தாக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணின் உடலில் தாறுமாறாக காயம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து 307, 302 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து 5 பேர் கொண்ட போலீசார் தலைமையில் விசாரணையை முடுக்கிவிடப்பட்டது. இதில் இறந்த பெண் காந்தர்வ் என்கிற சன்னியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்திருக்கிறார்.

இருவரும் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் சன்னியின் பால்ய நண்பரான சாகருடன் அந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சஃப்தார்ஜங் மருத்துவமனையை சுற்றிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததோடு, சாகரின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சாகருக்கு கடந்த வாரம் சன்னி மிரட்டல் விடுத்தது தெரிய வந்திருக்கிறது.

பின்னர் தலைமறைவாக இருந்த சன்னியை நொய்டாவின் கோகுல்புரி, குசும்புர் பஹாரி, கர்கர்டுமா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தியதில் ஒரு வழியாக சன்னியை பிடித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து போலீசிடம் சன்னி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில், சாகர் தன்னுடைய சின்னவயது நண்பர் என்றும் அவரது குடியிருப்புக்கு பக்கத்திலேயே குடியிருக்கிறார் என்றும் கூறிய சன்னி, தன்னுடைய மனைவிக்கும் சாகருக்கும் இடையே கடந்த 15 நாட்களாக உறவு இருந்ததும் இருவரும் அவருடன் சாகர் வாழ்ந்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதுபோக, தனது மனைவியை விட்டு தள்ளியிருக்குமாறு சாகரை இரண்டு மூன்று முறை எச்சரித்ததாகவும் கூறியுள்ள சன்னி, இருவரையும் குத்தி கொன்றதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என போலீசார் தெரிவித்திருப்பதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டியிருக்கிறது.