இந்தியா

திட்டிக்கொண்டே இருந்த தந்தை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்!

kaleelrahman

டெல்லியில் தந்தை திட்டிக் கொண்டே இருப்பதால் சிறைக்குச் செல்ல முடிவெடுத்து அதற்காக பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் அழைத்த ஒரு நபர் பிரதமர் மோடியை தான் கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார். அழைப்பு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இடத்தை கண்டறிந்த காவல் துறையினர், கஜூரி ஹாஸ் பகுதியைச் சேர்ந்த சல்மான் என்றழைக்கப்படும் இளைஞர் அர்மானை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அழைத்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டில் தந்தை திட்டிக் கொண்டே இருப்பதால் சிறை செல்வதற்காக இவ்வாறு செய்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பதே பிடித்திருப்பதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது அவர் போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா, இளைஞருக்கு போதை பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கைதான இளைஞர் ஏற்கெனவே கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர் எனவும், இவர், கடந்த 2018ஆம் ஆண்டு தான் விடுதலையானார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.