இந்தியா

ஆடுகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட இளம்பெண்

webteam

மகாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் புலியுடன் வெறும் குச்சிகளை கொண்டு சண்டையிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ரூபாலி மேஷ்ராம் (வயது 23). ரூபாலி வசித்து வரும் கிராமம் மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. ரூபாலியின் குடும்பத்தினர் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாலி மற்றும் அவரது தாய் வீட்டில் இருந்த நேரத்தில் கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. வெளியில் வந்து பார்த்தபோது  புலி ஒன்று அங்கிருந்த ஆட்டை தாக்கிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அங்கிருந்த ஒரு குச்சியைக் கொண்டு அந்த இளம்பெண் புலியுடன் சண்டையிட்டுள்ளார்.  ரூபாலியை புலி தாக்க தொடங்கியது.புலியின் தாக்குதலில் அந்தப் பெண்ணுக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட அவரது தாயார் அந்த இளம்பெண்ணை இழுத்து புலியிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால் அந்தக் கால்நடைகளை காப்பாற்ற முடியவில்லை.

இந்தச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறையினர் வருவதற்குள் புலி அங்கிருந்து சென்றுவிட்டது. புலியின் தாக்குதலில் காயமடைந்த ரூபாலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. புலி தாக்கியதில் அந்தப் பெண்ணுக்கு தலை,கை,கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருந்தது.அதிர்ஷ்டவசமாக அந்தப்பெண்ணை புலி கடிக்கவில்லை. இப்பெண்ணின் தைரியத்தை மருத்துவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ரூபாலியின் தாயார் கூறுகையில், புலியின் தாக்குதலில் எனது மகள் இறந்து விடுவாள் என் எண்ணிணேன். அவளை பார்க்க பயமாக இருந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட புலியுடன் வெறும் குச்சிகளை கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தாள் எனத் தெரிவித்துள்ளார்.