இந்தியா

போனில் பேச மறுத்ததாக கூறி இளம்பெண்ணை 51 முறை குத்தி கொன்ற கொடூர இளைஞர்!

Sinekadhara

சத்தீஸ்கரில் தன்னிடம் பேச மறுத்த 20 வயது பெண்ணை 51 முறை ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம், கோப்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளி, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்துள்ளார். அப்போது தினமும் அந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் நட்புகொண்டார். பின்னர் அங்கிருந்து வேலை நிமித்தமாக அகமதாபாத் சென்ற அந்த நபர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிவந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண்ணிடம் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதை அடுத்து, அந்த பெண் மற்றும் அவருடைய பெற்றோரை மிரட்டியுள்ளார் அந்த நபர். இந்நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி, South Eastern Coalfields Limited பகுதியிலுள்ள பம்ப் ஹவுஸ் காலனி வீட்டில் அந்த பெண் தனியாக இருந்தபோது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அந்த பெண் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அவரது வாயை தலையணையால் அடைத்து, ஸ்க்ரூட்ரைவரால் 51 முறை குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் சகோதரன், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது சகோதரியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர் என கோப்ரா காவல் கண்காணிப்பாளர் விஷ்வாதிபாக் திரிபாதி தெரிவித்துள்ளார்.