இந்தியா

பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை பெண் விமானி உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்

EllusamyKarthik

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பயிற்சி விமானி உயிரிழந்தார்.

 

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் மகிமா கஜராஜ். 29 வயதான இவர் குண்டூர்  ஆந்திர மாநிலம் பகுதியில் உள்ள விமான பயிற்சி மையத்தில் பயிற்சி விமானியாக இருந்தவர். இன்று பயிற்சி விமானத்தில் ராய்சோட்டி பகுதிக்கு சென்று விட்டு திரும்பிய போது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ராமண்ணகூடம் கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் நொறுங்கியது. பயிற்சி விமானி மகிமா கஜ்ராஜ் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து தகவறிந்த நல்கொண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரேமா ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

 இந்நிலையில், பயிற்சி விமானி மகிமா உயிரிழப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.