இந்தியா

செல்ஃபி மோகத்தால் கிணற்றில் விழுந்த நிச்சயதார்த்த ஜோடி ? - பெண் உயிரிழப்பு

webteam

பட்டாபிராம் அருகே செல்பி மோகத்தால் திருமணமாக இருந்த மணமக்கள் கிணற்றில் விழுந்து உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் அப்பு (24). தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெப்பி என்கின்ற மெர்சி-க்கும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்து, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இருவரும் சென்னை வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முத்தாபுதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி எடுத்துள்ளனர். கால் தவறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவரை பிடிக்க சென்ற போது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்பவர் அப்புவை காப்பற்றினார். 

அதற்குள் மெர்சி தண்ணீரில் மூழ்கினார். பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அப்புவை அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து ஆவடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவர் தலைமையில் வந்த மீட்பு படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி இறந்த உடலை மீட்டனர். சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இருவரும் செல்பி மோகத்தில் விழுந்தார்களா அல்லது தற்கொலை முயற்சி செய்து கொள்ள விழுந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.