இந்தியா

எலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'!  

webteam

ஆந்திராவைச் சேர்ந்த இளம் உயிரியலாளர் ஒருவர் நீலத் திமிங்கலத்தின் எலும்புகளை சேகரித்து அதன் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில், ஆந்திர பல்கலைக்கழக முன்னாள் மாணவரான கும்பட்லா பாலாஜி, சேகரிக்கப்பட்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடுகளை கொண்டு அதன் வடிவத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை தொடங்கினார். முன்னதாக மசூலிப்பட்டினம்கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு திமிங்கல உருவத்தை உருவாக்கும் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து மீண்டும் அந்த வேலையில் இறங்கினார் பாலாஜி. 

பாலாஜி தற்போது கோரிங்கா கடல்வாழ் அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார். அங்குதான் மசூலிப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்ட திமிங்கத்தின் எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை  மீண்டும் பயன்படுத்த திட்டமிட்ட பாலாஜி 32 அடி நீள நீலத் திமிங்கத்தின் உருவத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய பாலாஜி, மசூலிப்பட்டினம் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட திமிங்கத்தின் எலும்புகள் அருங்காட்சியகத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து அதன் உருவத்தை உருவாக்கி உள்ளேன். இதற்கு இரண்டு மாதங்கள் ஆனது. எலும்புகளை இணைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலும்புகளுடன் வினைபுரிந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஏராளமான திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் ஆந்திராவின் நாகயாலங்கா, மசூலிப்பட்டினம், காக்கிநாடா, மற்றும் ஸ்ரீகாகுளம் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின. திமிங்கலங்கள் ஏன் இறந்தன என்பது  குறித்து பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.