இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

JustinDurai
இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கிறார் எடியூரப்பா.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் எடியூரப்பா. முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. ஜூலை 16 அன்று டெல்லி சென்றிருந்த எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது.
அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.