இந்தியா

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா: குஜராத்தில் 2 ஆண்டுகளில் உருவாக்க ரிலையன்ஸ் திட்டம்!

Sinekadhara

குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் அதிக வகை விலங்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை நிறுவ ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த அம்பானி செயல்படுத்த உள்ளதாகவும், இந்த பூங்கா இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் கார்ப்பரேட் விவகார இயக்குநர் பரிமல் நாத்வானி இதுபற்றி அளித்த பேட்டி ஒன்றில், ‘’இந்தத் திட்டத்தை 280 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவ இருக்கிறோம். கொரோனா காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்னும் இரண்டு வருடங்களில் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.

குஜராத் கூடுதல் தலைமை செயலாளர் எம்.கே தாஸ் கூறும்போது, ‘’உலகின் மிகப் பெரிய சிலை குஜராத்தில் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது எண்ணிக்கையிலும், வகைகளிலும் அதிக அளவு விலங்குகளைக் கொண்ட உயிரியல் பூங்கா ஜாம்நகரில் நிறுவப்பட உள்ளது’’ என்றார்.

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வெளிட்ட தகவல்களிலிருந்து இந்த உயிரியல் பூங்கா, 'பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு ராஜ்ஜியம்' என அழைக்கப்படவுள்ளது. உலக அளவிலுள்ள அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகள், தவளை வீடு, ட்ராகன் பூமி, பூச்சிகள் இடம், நீர்வாழ் ராஜ்ஜியம், இந்திய காடுகள், மேற்கு சதுப்புநில உயிரிகள், இந்திய பாலைவன உயிரிகள் மற்றும் வெளிநாட்டு தீவு உயிரிகள் என பல்வேறு வகைகளாக பிரித்து வகைப்படுத்தவுள்ளதாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் திட்டமிட்டுள்ளதாக 'இந்தியா டுடே' தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க சிங்கம், சிறுத்தை, ஜாகுவார், இந்திய நரி, ஆசிய சிங்கம், மனித குரங்கு, பூனை, கரடி இனங்கள், வங்கப்புலி, கொரில்லா, வரிக்குதிரை, ஆப்பிரிக்கயானிகள் என பல்லாயிரக்கணக்கான விலங்குகள் இடம்பெறவுள்ளன.