இந்தியா

மலைக்கு மேலே மலையை குடைந்து... அசர வைக்கும் அடல் ரோஹ்டங் சாலை..!

webteam

உலகின் மிகப்பெரிய பொறியியல் துறையின் சவாலாகக் கருதப்படும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள அடல் ஹோஹ்டங் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பத்து ஆண்டு கடும் உழைப்பின் சின்னமாக உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3ம் தேதியன்று அந்த சாலையைத் திறந்துவைக்கிறார்.

லே - மணாலி நெடுஞ்சாலை என்பது லடாக் செல்லும் இரு வழிகளில் ஒன்றாக இருக்கிறது. ரோஹ்டங் சாலைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு அடல் ரோஹ்டங் சாலை என அழைக்கப்படுகிறது.

9.02 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தப்பாதை இந்தியாவின் மிக நீளமான சுரங்கச் சாலையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய சாலையின் மூலம் மணாலிக்கும் லே பகுதிக்குமான 46 கிலோ மீட்டர் பயண தூரம் குறைகிறது.

பத்து ஆண்டுகளாக நடைபெற்ற சாலைப் பணிகள் நிறைவடைந்து திறப்பதற்குத் தயார்நிலையில் உள்ளன.

கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள இந்த இரட்டைவழி சுரங்கப்பாதை மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் நீளமான சாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டம். எல்லைச் சாலைகள் அமைப்பின் பத்து ஆண்டு உழைப்பும் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் சாலையை உருவாக்கியுள்ளது.

இந்த சாலையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லாம். ஒரு நாளில் 3 ஆயிரம் கார்களும் 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோஹ்டங் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ரோஹ்டங் சுரங்கப் பாதைக்கு ஜூன் 28, 2010ம் ஆண்டு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அக்டோபர் 3 ம் தேதியன்று பிரதமர் மோடியால் திறக்கப்படவுள்ள சாலையில் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.