இந்தியா

அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை; மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா அரசு அறிவிப்பு

JustinDurai

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தலைமை செயலாளர் சோமேஷ் குமாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 8ல் மகளிர் தினத்தினை முன்னிட்டு மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை என அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆண்களுடன் அனைத்து துறையிலும், பெண்கள் போட்டி போடுகின்றனர்;  சிறந்தும் விளங்குகின்றனர். மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், வாய்ப்பு வழங்கப்பட்டால் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள்” என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.