ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி காபா என்ற பெண், லிங்க்டுஇன் தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”நானும் எனது சகோதரியும் சந்தைக்குச் சென்றிருந்தோம். அப்போது எனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர். ‘ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்?
இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்’ என தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டனர். நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அந்த அதிகாரி பதிலளித்தார். பின்னர், அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்புகொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக செல்போனைத் திருப்பித் தருவதாகக் கூறினார். திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமுகமான ஒருங்கிணைப்பு இருந்தது. இறுதியாக, எங்கள் செல்போன் திரும்பப் பெறப்பட்டது. அன்புள்ள ஹரியானா காவல்துறையினரே, திருடர்கள் உங்களைவிட அதிக ஒத்துழைப்பு தருகிறார்கள்” என அதில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பயனர்களிடமிருந்து பல ஆதரவான பதிவுகளையும் பெற்று வருகிறது.