இந்தியா

“ஆப்கன் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்”- டெல்லி போராட்டத்தில் அதிகளவில் பெண்கள் பங்கேற்பு

EllusamyKarthik

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர். அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கேள்விக் குறியாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி தலைநகர் டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தி உள்ளனர். 

டெல்லியில் மண்டி ஹவுஸ் பகுதியில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றது மாணவர்கள். அதிலும் பெண்களே அதிகம். அனைவரும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். 

“நாங்கள் இங்கு ஆப்கன் பெண்கள் சார்பாக குரல் கொடுக்க வந்துள்ளோம். அவர்களது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அவர்களுக்கு உடனடி தேவை. தலிபான்கள் மகளிர் நலன் சார்ந்து என்ன சொன்னாலும் அவை அனைத்தும் பொய் தான். அவர்கள் கல்விக் கூடங்களுக்கோ, வேலைக்கோ செல்ல தலிபான்கள் அனுமதிக்கமாட்டார்கள். பெண்களை வலுக்கட்டாயமாக பலவந்தம் செய்து திருமணம் செய்து வருகின்றனர். அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை மிகவும் மோசம்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியா தங்களுக்கு அடைக்கலம் மற்றும் உறைவிடம் கொடுத்துள்ளது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் எனப் போராட்டத்தில் பங்கேற்ற ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.