மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய தலைநகர் டெல்லியில் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் திரண்டு அறவழியில் போராடி வருகின்றனர். அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மெகா சீரியலைபோல தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் போராட்ட களத்திலேயே கபடி விளையாடி அசத்தியுள்ளனர் விளையாட்டு வீராங்கனைகள்.
இந்த கபடி போட்டி சிங்கு எல்லையில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்த 12 கபடி அணிகளை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். இதற்காக பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து அவர்கள் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். அண்டர் 14 மற்றும் அப்பர் ஏஜ் என இரு பிரிவுகளாக கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு போட்டியும் 40 நிமிடங்கள் வீதம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய பெரும்பாலான வீரர்களின் பெற்றோர்கள் விவசாயிகள். அதனால் அவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கவே களத்தில் விளையாடியதாகவும் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். போட்டி நடத்தப்பட்ட போது மழை குறுக்கிட்டுள்ளது. அதை பொருட்படுத்தாமல் வீரர்கள் விளையாடியுள்ளனர். நாங்கள் இங்கு வெற்றி பெறுவதற்காக வரவில்லை, எங்களது ஆதரவை தெரிவிக்கவே விளையாட வந்துள்ளோம் என ஒருமித்த குரலில் உரக்க சொல்கின்றனர் கபடி வீராங்கனைகள்.
“கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடாதீர்கள்” என்பதை விடமால் சொல்லிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் இந்த சிங்கப்பெண்கள்.