இந்தியா

30 ஆண்டுகளாக ‘டீ’ மட்டுமே குடித்து ஆரோக்கியமாக வாழும் பெண்

webteam

சிலருக்கு டீ குடிக்காமல் வாழ முடியாமல் இருக்கலாம். டீ மட்டுமே குடித்து வாழ முடியுமா? என்றால் முடியாது என்பதே பதிலாக இருக்கும். ஆனால், சத்தீஷ்கரில் ஒரு பெண் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து வாழ்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.

கோரியா மாவட்டத்தின் பரதியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. இப்போது 44 வயதாகும் இவர், தனது 11 வயதில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதில்லை. 

30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார் பில்லி தேவி. மேலும் இவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். 6ஆவது படிக்கும்போது பீகார் தலைநகர் பாட்னாவில் ஒரு விளையாட்டுப் போட்டிக்காகப் போன பில்லி தேவி, வீடு திரும்பியதில் இருந்து உணவு, தண்ணீர் எடுத்துக் கொண்டதில்லை என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

முதலில் சாதாரண டீ குடித்து வந்த பில்லி தேவி, படிப்படியாக பால், சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து பிளாக் டீக்கு மாறி விட்டதாகவும் அவரது பெற்றோர் கூறுகின்றனர். 

இவரது பழக்கத்துக்கு உடல்நலக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்குமோ என அறிய மருத்துவரிடம் பரிசோதனைகள் செய்ததாகவும், ஆனால், பில்லி தேவி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் கூறிவிட்டதாகவும் பில்லி தேவியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.