இந்தியா

உரிய நேரத்தில் நாப்கின் கொடுத்து உதவிய ரயில்வே நிர்வாகம் - மக்கள் பாராட்டு 

webteam

ரயில் பயணத்தின் போது சானிட்டரி நாப்கின் கேட்ட பெண்ணுக்கு ரயில்வே உதவியது தெரியவந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து ஒரு பெண் பயணி ஒருவர் ஜோத்பூர்-பூரி விரைவு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் சானிட்டரி நாப்கின் தேவைப்பட்டது. இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவை பதிவிட்டார். 

அதில், “இந்தியன் ரயில்வே முக்கியமான சானிட்டரி நாப்கின் தவிர பிற பொருட்கள் எல்லாவற்றையும் விற்று வருகிறது. இப்போது எனக்கு முக்கியமாக சானிட்டரி நாப்கின் தேவைப்படுகிறது. எனக்கு ரயில் வேசேவா அல்லது ரயில்வே அமைச்சகம் உதவவேண்டும். என்னுடைய பி.என்.ஆர் நம்பர் 24. மற்றும் ரயிலின் நம்பர் 20814” எனப் பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் அவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சானிட்டரி நாப்கின் கிடைக்க உதவி செய்தது. மேலும் அப்பெண்ணிற்கு உதவ நாக்பூர் காவல்துறையும் முன்வந்து அப்பெண்ணின் தொலைப்பேசி எண்ணை ட்விட்டரில் கேட்டது. இருப்பினும் அப்பெண் தனக்கு ரயில்வே நிர்வாக ஏற்கெனவே உதவியதாக அதற்குப் பதிலளித்தார். 

அத்துடன் அப்பெண்ணின் ட்விட்டர் பதிவிற்கு சிலர் இதை நீங்கள்தான் முன்னேற்பாடாக வைத்திருக்கவேண்டும். ஏனென்றால் மாதவிடாய் என்பது தீடீரென்று வராது என்று பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு அப்பெண் தனது பதிவின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்தார். சானிட்டரி நாப்கின் உதவி கேட்ட பெண்ணுக்கு உரிய நேரத்தில் உதவிய  ரயில்வே நிர்வாகம் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.