இந்தியா

”என்னால இந்த பழக்கத்த மாத்திக்க முடியல; அதுக்கான செலவை..” - கோர்ட்டை நாடிய முன்னாள் மனைவி!

JananiGovindhan

பிரிந்து சென்ற மனைவிக்கு கணவன்மார்கள் ஜீவனாம்சம் வழங்குவது வழக்கமான நடைமுறை. ஆனால் பல ஆண்டுகளாக பழக்கப்பட்டு வந்த வழக்கத்தை கடைபிடிப்பதற்காக முன்னாள் கணவனிடம் இருந்து அதற்கான தொகையை பெற நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பெண் ஒருவர். இந்த சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது.

18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த அவர்கள், கடந்த 2020ம் ஆண்டு பிரிந்தனர். அதன் முடிவில், அந்த மனைவி தன் கணவருக்கு கோரிக்கையொன்று வைத்துள்ளார். அது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அதனை அக்கணவர் நிறைவேற்ற வேண்டுமென்று நீதிமன்றமும் ஆணையிட்டிருக்கிறது.

மூன்று நிறுவனங்களை நடத்தி வரும் அந்த கணவர் மாதத்திற்கு கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம். அந்த மனைவியோ ஆண்டுக்கே வெறும் 3 லட்சம்தான் சம்பாதிக்கிறார். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போது சகல வசதிகளோடு இருந்திருக்கிறார் அந்த பெண்.

தற்போது இருவரும் பிரிந்திருந்தாலும் தன்னால் அந்த High standard life என்ற வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றும், இதற்காக ஆகும் செலவுக்கு இனியும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் அந்த பெண்.

இந்த விவகாரம் மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் சி.பி. காஷித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று அவரது பராமரிப்பு செலவுக்கு ஆகும் 35 ஆயிரம் ரூபாயும், 15,000 ரூபாய் வீட்டு வாடகையும், ரூ. 50,000 டெபாசிட்டும் செய்ய வேண்டும் என அந்த கணவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.