இந்தியா

சபரிமலையில் நுழைந்த கனகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம் !

Rasus

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா தனது மாமியார் வீட்டிலிருந்து விரட்டி வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் அரசு விடுதியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் பல போராட்டங்கள் நடந்தன. இதனிடையே அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதனையடுத்து கனகதுர்கா தனது வீட்டிற்கு சென்றபோது மாமியாரால் தாக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகியோருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேமசயம் தனது மருமகள் கனகதுர்கா தன்னை தாக்கியதாக மாமியார் புகார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கனகதுர்கா மீண்டும் தனது மாமியார் வீட்டிற்கு சென்றபோது குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்து சடங்குகளை மாற்றிவிட்டாய் எனக்கூறி வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்து பெரிந்தலமன்னா பகுதியில் உள்ள அரசு விடுதியில் கனகதுர்கா தஞ்சம் அடைந்துள்ளார். கோயிலுக்குள் சென்றதால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியென்றால் தான் வீட்டிற்குள் அனுமதிப்போம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.