இந்தியா

திருமணத்தை மீறிய உறவு - மனைவியை சாட்டையால் அடித்து தெருத்தெருவாக இழுத்துச் சென்ற கணவர்!

ஜா. ஜாக்சன் சிங்

திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி பெண்ணை அவரது கணவன் உள்ளிட்டோர் சாட்டையால் அடித்து தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள போர்படாவ் கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த ராகுல் தோடா என்பவரின் மனைவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில தினங்களுக்கு முன்பு மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த கிராமம் முழுவதும் ராகுல் தோடாவும், ஊராரும் சீதாவை தேடியுள்ளனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் கீதா இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞருடன் கீதா அண்மைக்காலமாக திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்ததாக கிராமத்தினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கீதாவை அவரது கணவர் உள்ளிட்ட கிராமத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் சாட்டையால் சரமாரியாக அடித்து தெருத்தெருவாக ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். மேலும், கீதாவின் தோளின் மீது அவரது கணவரை அமர வைத்து சில கிலோமீட்டர் தூரம் வரை சுமந்து போக செய்தனர். ஒருகட்டத்திற்கு மேல் பாரம் தாங்க முடியாமலும், அடி தாங்க முடியாமலும் கீதா மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, கீதாவின் கணவர் உட்பட 14 பேரை கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.